தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நடிகர்கள் : ஸ்ரீகாந்த், சுனைனா, சந்தானம், ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு மற்றும் பலர். ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன் (சிறப்பு தோற்றம்).
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவு : எம். எஸ். பிரபு
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : கணேசா
பிஆர்ஓ : ஜான்
தயாரிப்பாளர் : கோல்டன் ப்ரைடே பிலிம் (வந்தனா ஸ்ரீகாந்த்)
கதைக்களம்…
மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதர்களை நாம் பார்த்து இருக்கிறோம்.
ஆனால் அவர்களுக்குள் இருக்கும் நம்பியாரின் (சினிமாவில் வரும் அந்த வில்லன் நம்பியாரை மட்டுமே சொல்கிறோம்.) கெட்ட எண்ணங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது என்பதே இப்படத்தின் கதை.
கதாபாத்திரங்கள்…
எம்ஜிஆர் மாதிரியான நல்ல மனிதராக ஸ்ரீகாந்த், அவரது கேடு கெட்ட மனசாட்சியின் உருவமாக சந்தானம் நடித்துள்ளனர்.
சுனைனாவின் காதலுக்காக ஏங்குவது, தண்ணி அடித்துவிட்டு ரகளை செய்வது, பொறுப்பில்லாமல் திரிவது என நம்பியார் குணத்தால் ரசிக்க வைக்கிறார் ஸ்ரீகாந்த்.
நல்லவனாக வாழ முடியாமல் தவிக்கும் காட்சிகளில் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இன்னும் ஸ்மார்ட்டாகவே இருக்கீங்களே பாஸ் எப்படி?
நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தானத்தின் கல கல. ஆனால்… நிறைய காட்சிகளில் எரிச்சலை செய்யும் விதமாக ஓவராகவே பேசியிருக்கிறார். குறைத்திருக்கலாம்.
தன் உதடுகளாலும் கண்களாலும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறார் சுனைனா. ஒரு காட்சியில் நைட்டியில் வந்து கிறங்கடிக்கிறார்.
இவர்களுடன் ஜான்விஜய், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு உள்ளிட்டோரும் கொடுத்த பணியை செய்துள்ளனர்.
கௌரவ தோற்றத்தில் வந்து நண்பேன்டா ஆக வந்து செல்கிறார்கள் ஆர்யா மற்றும் பார்வதி ஓமனக்குட்டன். ஒரு பாடலுக்கு விஜய் ஆண்டனியும் வருகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
விஜய் ஆண்டனியின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது. இரண்டு பாடல்கள் தாளம் போட வைக்கிறது.
எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு ‘பளிச்’ பதிவு. விவேக் ஹர்சன் சில காட்சிகளுக்கு கத்திரி போட்டு இருக்கலாம்.
படத்தின் ப்ளஸ்…
- விஜய் ஆண்டனியில் இசையில், “தூங்கும் பெண்ணே தூங்காதே…” பாடல்கள் ரசிக்க வைக்கிறது.
- ஸ்ரீகாந்த் – சந்தானத்தின் கெமிஸ்ட்ரி
- கண்களுக்கு விருந்தாக கலர்புல் ஹீரோயின் சுனைனா
- சில காட்சிகளில்…. ஸ்ரீகாந்த் டீசர்டில் Together சந்தானம் டீசர்டில் To Get Her, Now Here – No Where என்ற க்ரியேட்டிவ்வாக யோசித்து இருக்கிறார் கணேஷா.
படத்தின் மைனஸ்…
- சந்தானத்தை ஒரு கேரக்டராக உருவாக்கி கலாய்க்க விட்டிருந்துதால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
- எல்லா காட்சிகளிலும் ஸ்ரீகாந்துக்கும் சந்தானத்திற்கும் ஒரே உடையாக இருக்கும்போது ஒரு சில காட்சிகளில் மனசாட்சியின் உடை மாறியது ஏன்? உதவி இயக்குனர்கள் கவனிக்க வில்லையா?
இயக்குனர் பற்றி…
கெட்ட எண்ணங்களை அழித்தால் மட்டுமே நல்ல மனிதனாக வாழமுடியும் என்பதை நீளமாக சொல்லிவிட்டார் இயக்குனர் கணேஷா.
அதற்கு ஒரு உருவம் கொடுத்து நடிக்க வைத்திருப்பது கொஞ்சம் வித்தியாசமான முயற்சிதான். ஆனால் ஸ்வாரஸ்யமான திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டிருக்கிறார்.
இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் நினைத்து கொண்டிருப்பதை விட நிகழ்காலத்தை நினைத்து வாழ்க்கையை சந்தோஷமாக வாழ வேண்டும் என சொல்லி முடிக்கிறார் இயக்குனர்.
மிரட்டாத இந்த நம்பியாரை பார்க்கலாம்.