தரமணி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த்ரவி, அழகம்பெருமாள், ஜேஎஸ்கே மற்றும் பலர்.
இயக்கம் : ராம்
இசை : யுவன்சங்கர் ராஜா
ஒளிப்பதிவாளர் : தேனிஈஸ்வர்
எடிட்டர்: ஸ்ரீகர்பிரசாத்
பி.ஆர்.ஓ. : சுரேஷ்சந்திரா
தயாரிப்பு : ஜேஎஸ்கே (சதீஷ்குமார்)

கதைக்களம்…

நமக்கு பிடித்த ஆண்/பெண் நட்பாக இருந்தால் யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் காதல் என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டால் அவர் நம்மிடம் மட்டும்தான் பேச வேண்டும் என் ஒரு அதீத பிடிப்பு (Possessiveness) வந்துவிடும்.
அது நம் சந்தோஷத்தை சந்தேகமாக மாற்றிவிடும். அதன் பின்னால் வரும் விளைவுகளை உணர்வுபூர்வமாக உரைக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராம்.

ஒரு மழைக்காக ஒதுங்கும் ஆண்ட்ரியாவும் வசந்த் ரவியும் சந்திக்கின்றனர். பழகுகின்றனர். அதன்பின்னர் அவர்களுக்குள் பரிமாறப்படும் விஷயங்களும் விவாதங்களுமே படத்தின் கதையோட்டம்.

அஞ்சலியை காதலித்து ஏமாற்றப்பட்ட வசந்த்ரவி, கணவனைப் பிரிந்த ஆண்ட்ரியா… இவர்களுக்குள் எழும் காதல், மோதல், ஊடல், என அனைத்தையும் பிரித்து மேய்ந்திருக்கிறார் ராம்.

கேரக்டர்கள்…
ஆண்ட்ரியாவுக்கு இனி இப்படியொரு கேரக்டர் கிடைக்குமா? தெரியாது. எனவே கிடைத்த வாய்ப்பில் சிக்ஸர் அடித்திருக்கிறார். அப்ளாஸை அள்ளிச் செல்கிறார் ஆண்ட்ரியா.
காதலி, அம்மா, ஐ.டி.பணி பெண் என எல்லா தரப்பிலும் நம்மை அசத்தியிருக்கிறார்

அறிமுகநடிகர்தான் என்றாலும் வசந்த்ரவியை பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம். நடிப்பில் நல்ல முதிர்ச்சி.

காதலி போனை கையில் வைத்திருந்தால் சந்தேகம் அதனால் ஏற்படும் கோபம், அதன்பின் பாவம், பரிதாபம் என நன்றாக ஸ்கோர் செய்கிறார்.

சில காட்சிகளிலேயே வந்தாலும் அழகிலும் நடிப்பிலும் நம்மை கவர்கிறார் அஞ்சலி.

ஒற்றைக் காட்சியில் அழகம் பெருமாள் அசத்தல்.

இப்பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கேவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். சபாஷ் சதீஷ் சார்.

சிறுவன் ஏட்ரியன் தன் கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்.

யுவன் மற்றும் நா.முத்துக்குமார் கூட்டணி என்றுமே சோடை போகாது என்பதற்கு இந்த படமும் ஒரு உதாரணம்.

யாரோ உச்சிக்கிளை மேலே, உன் பதில் வேண்டி, ஒரு கோப்பை பாடல்கள் ஆகிய அனைத்தும் ரசிக்கும் ரகம்.

சென்னை மாநகரத்தின் அழகையும் அழுக்கையும், அழுகையையும் என ஒட்டுமொத்தமாக அள்ளி தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்.

தேனிஈஸ்வர் என்பதால் என்னவோ, காட்சிகளும் தேன் போன்ற இனிப்பு.

இயக்கம் பற்றிய அலசல்…

’’நீ இனிமே சிகரெட் பிடிக்காதே, ஏன் உனக்கு பிடிக்கத் தெரியலை”, ’’ஒரு பையனுக்கு அம்மா நீ. இனிமே குடிக்காதே….நீயும் உன் அம்மாவுக்கு பையன் தானே” என்ற வசனங்களை பார்த்த பிறகாவது சிகரெட் பிடிப்பவர்கள் திருந்தட்டும்.

படத்தின் காட்சிகள் இடையே ராம் கொடுக்கும் வாய்ஸ் ஓவர் படத்திற்கு ப்ளஸ்.

வசனங்கள் மூலம் விளக்கம் கொடுத்து நம்மை வியக்கவைக்கிறார்.

நன்றாக படித்து வேலைக்கு சென்று ஹைஃபையாக வாழும் பெண்களை இந்த ஆண்களும் சில பெண்களும் ஒரு தவறான கண்ணோத்துடன் பார்க்கின்றனர்.
அதன் தாக்கம் படத்தின் பல இடங்களில் பளிச்சிடுகிறது.
தரமணி… தரமான மணி

வேலையில்லா பட்டதாரி2 விஐபி2 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், கஜோல், அமலாபால், சமுத்திரக்கனி, விவேக், சரண்யா பொன்வண்ணன், ரைசா, சரவண சுப்பையா, பாலாஜிமோகன் மற்றும் பலர்.
இயக்கம் : சௌந்தர்யா ரஜினிகாந்த்
இசை : ஷான் ரோல்டான்
ஒளிப்பதிவாளர் : சமீர் தஹிர்
எடிட்டர்: பிரசன்னா ஜிகே
பி.ஆர்.ஓ. : ரியாஸ் அஹ்மது மற்றும் டைமண்ட் பாபு
தயாரிப்பு : கலைப்புலி எஸ் தாணு மற்றும் தனுஷ்

கதைக்களம்…

படத்தின் கதை ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் (இஞ்ஜினியரிங்) விருது விழாவில் தொடங்குவது போல் காட்சியை அமைத்துள்ளார் சௌந்தர்யா.

அந்த விருது விழாவில் எல்லா விருதுகளும் வசுந்திரா (கஜோல்) நிறுவனத்திற்கு கிடைக்கிறது.

ஆனால் பெஸ்ட் இன்ஜினியர் விருது மட்டும் ரகுவரனுக்கு (தனுஷ்) கிடைக்கிறது.

எனவே அவரை பயன்படுத்திக் கொள்ள, தன் கம்பெனியில் வேலைக்கு சேர அழைக்கிறார் கஜோல்.

ஆனால் அந்த வாய்ப்பை மறுக்கும் சிங்கத்திற்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருக்க விரும்புகிறேன் என பன்ச் பேசி திரும்பி வருகிறார்.

அதன்பின்னர் இவர்களுக்குள் நடக்கும் இன்ஜினியரிங் இடுபாடுகளே படத்தின் முழுக்கதை,

கேரக்டர்கள்…

தனக்கே உரித்தான அந்த வெட்டி பையன், நக்கல், மிடுக்கு, பன்ச் என அசத்தலாக வருகிறார் தனுஷ்.

லவ் பன்னும்போதும் இப்படிதான் பாத்தா, ஆனா அப்போ ரொமான்ஸ் தெரிஞ்சது, இப்போ கடுப்பா இருக்கே என கூறும்போது இன்றைய நவீன கணவன்மார்களை நிருபிக்கிறார்.

பாடல் மற்றும் ரொமான்ஸ்க்கு அதிக இடம் தராமல் பொறுப்பான சமூக கருத்துக்களை சொல்ல முயற்சித்துள்ளார் தனுஷ்.

நிறைய திருக்குறள்களை அடிக்கடி சொல்லி இளைஞர்களுக்கு நியாபகப்படுத்திய அவருக்கு நன்றி.

குடிச்சியா? ஊதி காட்டு, நான் இங்க பேசிகிட்டே இருக்கேன். நீங்க என்ன பண்றீங்க? என கடுகடுப்பாக அமலாபால் பேசினாலும் அழகாக வருகிறார்.

தனி ட்ராக் இல்லாமல் கதைக்கு தேவையான காமெடி செய்கிறார் விவேக். ஆனால் காமெடியில் இன்னும் கலக்கியிருந்தால் ரசித்திருக்கலாம்.

பொறுப்பான அப்பாவாக சமுத்திரக்கனி. ஆனால் வெறும் அட்வைஸ் செய்ய மட்டுமே வருகிறார்.

கணவன் கண்னுக்கு தெரியாத சரண்யா, தனுஷ்க்கு மட்டும் நேரில் வந்து வழிகாட்டுகிறார்.

திமிருக்கு ஏற்ற அழகு, அழகுக்கு ஏற்ற நடிப்பு என கஜோல் கலக்கல்.

மழையின் போது உள்ள சண்டைக் காட்சியிலும் அனல் பறக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயச்சந்திரன் ஒரே காட்சியில் வந்தாலும் மாணவர்கள் சக்திக்கு பயப்படுவது ஜல்லிக்கட்டு போரட்டத்தை நினைவுப்படுத்துகிறார்.

இயக்குனர்கள் பாலாஜிமோகன், சரவண சுப்பையா காட்சிகள் செயற்கையாக உள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இறைவன் தந்த இறைவி பாடல் வரிகள் ரசிக்க வைக்கிறது. ஆனால் ஷான் ரோல்டன் பின்னணி இசை எதிர்பார்த்த அளவு இல்லை.

பன்ச் பேசுவதற்காக சில காட்சிகளில் பின்னணி இசையை ஒலித்தாலும், அது பொருந்தவில்லை.

ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.

பிரசன்னா ஜிகே சரியாக கத்திரி போட்டிருந்தாலும், இன்னும் சில காட்சிகளை வெட்டியிருக்கலாமோ என் கேட்க வைக்கிறார்.

இயக்கம் பற்றிய அலசல்…

விளையாட்டுத்தனமான கணவன், கண்டிக்கும் மனைவி என காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

அம்மா இல்லையென்றாலும் பொறுப்பான அப்பா, வழிநடத்துவது என அழகான குடும்பத்தை காட்டியிருப்பது சரி.

ஆனால் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் அது சம்பந்தமான காட்சிகளின் வேகத்தை குறைத்திருக்கலாம்.

ஷேர் கான்ட்ராக், ஷேர் கேன்சல் திடீர் திடீரென எல்லாம் நடப்பது காட்சிகளில் ஒன்ற வைக்க மறுக்கிறது.

சென்னை வெள்ளம் போல ஒரு காட்சியை வைத்து, வெள்ளம் வந்தால், இங்கே எல்லா மனிதர்களும் ஒன்றுதான் என பன்ச் பேசி முடிக்கிறார் வசனகர்த்தா தனுஷ்.

முதல் பாக விஐபியில் யதார்த்தம், எளிமை இதில்லை.

விஐபி2… ஒரே பார்முலா வேற ரூட்

பொதுவாக எம்மனசு தங்கம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : உதயநிதி, நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி, மயில்சாமி, சர்மிளா ரோஷி மற்றும் பலர்.
இயக்கம் : தளபதி
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : பாலசுப்ரமணியம்
எடிட்டர்: தினேஷ் பொன்ராஜ்
பி.ஆர்.ஓ. : விஜயமுரளி மற்றும் கிளாமர் சத்யா
தயாரிப்பு : ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

கதைக்களம்…

கூத்தப்பாடி என்ற கிராமத்தில் வசிப்பவர் கணேசன் (உதயநிதி). இவரது ண்பர் டைகர் பாண்டி (சூரி).

இருவரும் ஊர் சுற்றினாலும் ஏதாவது ஊருக்கு நல்லது செய்ய நினைக்கின்றனர். அப்படி செய்து சில வம்பிலும் மாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களுக்கு பக்கத்து ஊரை சேர்ந்தவர் ஊத்துக்காட்டான் (பார்த்திபன்). மிகப்பெரிய பணக்காரர்.

இவர் ஒரு புகழ் அடிமை. அதாவது விளம்பரப் பிரியர். இவரே வீட்டை கொளுத்திவிட்டு அதற்கு நஷ்ட ஈடும் கொடுப்பதும் வழக்கம்.

அதுபோல் இவரது தங்கையை கல்யாணம் செய்துக் கொடுத்த ஊருக்கு பல நன்மைகள் செய்துக் கொடுத்து பெயர் வாங்குகிறார்.

தங்கை புகுந்த ஊருக்கே இப்படி செய்கிறாரே, இவரின் மகளை மணந்தால் என்னவெல்லாம் செய்வார்? என கணக்கு போட்டு அவரின் மகள் நிவேதாவை காதலிக்கிறார் உதயநிதி.

ஆனால் பெயர் எடுப்பதில் கணேஷ் தன்னை மிஞ்சிவிடுவானோ என எண்னும் பார்த்திபன் அவரை ஊர் மக்கள் உதவியுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறார்.

பின்னர் என்ன ஆனது? அவர் மறுபடி வந்தாரா? காதலியை கரம் பிடித்தாரா? பார்த்திபன் என்ன செய்தார்? என்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் அளித்துள்ளார் இயக்குனர் தளபதி பிரபு.


கேரக்டர்கள்…

படத்திற்கு படம் உதயநிதியின் நடிப்பு மெருகேறிவருகிறது என்பது உண்மை. பாட்டு, பைட்டு, வெட்டிபையன் என கலகலப்பாக வருகிறார்.

கிராமத்து இளைஞனாக ஜொலிக்கிறார். ஆனால் படம் முழுக்க கூலிங்கிளாஸ், கலர்புல்லாக பேண்ட் சர்ட்டில்தான் வருகிறார்.

சூரி மாதிரி சில காட்சிகளிலாவது லுங்கியில் வந்திருக்கலாம்.

சூரி காமெடிதான் படத்தின் ஹைலைட்ஸ். அதிலும் இவருடன் வரும் பல் துலக்காத நபரும் நல்ல தேர்வு.

தனக்கே உரித்தான நக்கல், நையாண்டியுடன் வில்லத்தனமும் செய்திருக்கிறார் பார்த்திபன். இனி வில்லனாகவும் ஜொலிப்பார்.

இந்த படம் மூலம் பார்த்திபன்-உதயநிதி-சூரி கூட்டணி உருவாகியிருக்கிறது. மூவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

மனதில் நிற்கும்படியான கேரக்டரில் மயில்சாமி.  எடக்கு மடக்காக பேசி பார்த்திபனிடம் பம்முவது சூப்பர்.

கிராமத்து பைங்கிளியாக பளிச்சிடுகிறார் நிவேதா பெத்துராஜ். ஆனால் கோபம் படும் காட்சிகளில் முகபாவனைகளில் இன்னும் மெச்சூர்ட்டி தேவை.

இவர்கள் தவிர படத்தில் ஊர் பெரியவர், மீசைக்காரர் என ஊர் பட்டாளமே நடித்துள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படம் முடியும் வரை ஏதோ ஊர் திருவிழாவுக்கு சென்று வந்து ஃபீலிங்கை தருகிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எல்லாம் கலர்புல். சில காட்சிகளில் கொஞ்சம் ஓவர்தான்.

இமானில் இசையில் மெலோடியும் சரி, குத்துபாட்டும் ரசிக்க வைக்கிறது.

சும்மா இருக்கிறது ஈசியில்லை என்ற பாடல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சாயல் இருக்கிறது. இரண்டாம் பாதியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

இயக்கம் பற்றிய அலசல்…

ஊருக்கு நல்லவராகவும் உள்ளத்தில் கெட்டவராகவும் பார்த்திபன் கேரக்டரை வடிவமைத்துள்ளது சபாஷ் போட வைக்கிறது.

இண்டர்வெல் காட்சியில் என்னவாகுமோ? என்ற ட்விஸ்ட் வைத்த டைரக்டர் அந்த ட்விஸ்ட்டை உடனே அவிழ்த்திருப்பது ரசிக்கவில்லை.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் 2ஆம் பாகம் என்னும் சொல்லும்மளவுக்கு அதே ரூட்டில் பயணிக்கிறார்.

இயக்குனர் பொன்ராமின் உதவியாளர் என்பதால் அவரைப் போன்றே கதையை கொடுத்து தன் வெற்றியை தக்கவைத்துள்ளார் தளபதி பிரபு. (ஆனால் குருவை மிஞ்சவில்லை)

பொதுவாக எம்மனசு தங்கம்… தங்கமின்னாலே மின்னும்

சதுர அடி 3500 விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : இனியா, நிகில், ரகுமான், ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், கோவை சரளா மற்றும் பலர்.
இயக்கம் : ஜாய்சன்
இசை : கணேஷ் ராகவேந்திரா
ஒளிப்பதிவாளர் : பிரான்சிஸின்
பி.ஆர்.ஓ. : யுவராஜ்
தயாரிப்பு : ரைட் வியூ சினிமாஸ்

கதைக்களம்…

நிலமோசடி மாபியா கும்பலும் அதனால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்க்கையையும் திகில் கலந்த கதைக்களத்துடன் சொல்லப்பட்டுள்ள படமே ’சதுரஅடி 3500’.

ஒரு மிகப்பெரிய அடுக்குமாடி கட்டிடத்தை அழகாக கட்ட நினைக்கிறார் ஆகாஷ்.

இதற்காக பல கோடிகளை முதலீடு செய்கிறார். மேலும் பெரிய கான்ட்ராக்டர் எம்எஸ் பாஸ்கரின் மகள் இனியாவிடமும் (காதலி) பணம் பெறுகிறார்.

கட்டிடம் முடியும் தருவாயில் மாபியா கும்பல் தாதா பிரதாப்போத்தன் இவரை மிரட்டி அந்த கட்டிடத்தை மிரட்டி வாங்க நினைக்கிறார்.

ஆகாஷ் மறுக்கவே அவரை கொலை செய்கிறார்.

இந்நிலையில் இனியாவுக்கு பெண் பார்க்கிறார் எம்எஸ் பாஸ்கர். ஆனால் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளை ஆகாஷின் பேய் மிரட்டுகிறது.

மேலும் அந்த கட்டிடத்தை பாதுகாக்கிறது. எனவே போலீஸ் நிகில் இந்த விசாரணையில் இறங்குகிறார்.

ஆனால் ஒரு சாமியார் மூலம் ஆகாஷ் சாகவில்லை என நிகிலுக்கு தெரிய வருகிறது.

அப்படியென்றால் பேயாக வருபவர் யார்? ஆகாஷ் என்ன ஆனார்? இனியா காதல் என்ன ஆனது? என்ற பல கேள்விகளுக்கு மிரட்டலாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஜெய்சன்.

கேரக்டர்கள்…

இப்படத்தின் போஸ்டர்களில் பிரமாதமாக காணப்பட்டவர் ரகுமான். ஆனால் ஓரிரு காட்சிகளில் மட்டுமே வருகிறார். இந்த விசாரணையை ஆரம்பித்து வைத்து விட்டு செல்கிறார்.

இனியா அழகான கண்களால் கவர்கிறார். சில காட்சிகளில் பேயாகவும் மிரட்டுகிறார்.

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ஹீரோ நிகில் கம்பீரமாக வருகிறார். போலீசுக்கு உரித்தான சீரியஸ் முகம் இவருக்கு. எனவே காதல் காட்சிகளில் சுவாரஸ்யம் இல்லை.

ஆவியாக வந்து மிரட்டும் ஆகாஷ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்‌ஷித் என அனைவரும் இருந்தாலும் இன்னும் வலுவான பாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால் ரசித்திருக்கலாம்.

இனியாவை காதலிக்கும் மெக்கானிக் நடிகரின் நடிப்பு செயற்கையாக இருக்கிறது. காட்சிகளில் ஒன்றவில்லை.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் இரண்டு பாடல்கள் குத்து ரகம். ஆனால் அதில் ஒரு பாடல் தேவையில்லாமல் திணிக்கப்பட்டிருக்கிறது.

பிரான்சிஸின் ஒளிப்பதிவு காட்சிகளில் மிரட்டல் தெரிகிறது.

தன் காதலியை யாரும் மணக்க கூடாது என எல்லா மாப்பிள்ளைகளையும் மிரட்டும் ஆகாஷ் இறுதியாக காதலியை விட்டுக் கொடுப்பது ஏன்? என்பது புரியவில்லை.

வலுவான கதையை இயக்குநர் ஜாய்சன் அமைந்திருந்தாலும் பல காட்சிகளில் சலிப்பை தட்ட செய்கிறார்.

மொத்தத்தில்… ‘சதுரஅடி 3500’ சறுக்கல் பாதை

கூட்டத்தில் ஒருத்தன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அசோக் செல்வன், பிரியா ஆனந்த், பாலசரவணன், மாரிமுத்து, சமுத்திரக்கனி, நாசர், அனுபமா, ஜான்விஜய் மற்றும் பலர்.
இயக்கம் : ஞானவேல்
இசை : நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: லியோ ஜான்பால்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : டிரீம் வாரியர்ஸ் எஸ்ஆர் பிரபு

கதைக்களம்…
பொதுவாக பல படங்களில் பர்ஸ்ட் பென்ச் மாணவனே ஹீரோவாக இருப்பார். அல்லது கடைசி பென்ச் மாணவன் அதிக கவனிக்கப்படுவான்.

சினிமாவில் மட்டுமில்லை. நம் வாழ்க்கையில் கூட இப்படி நடந்திருக்கும். ஆனால் இந்த படம் மிடில் பென்ச் மாணவனும் அவனது வாழ்க்கையும்தான்.

யாருக்கும் அதிக பரிச்சயமில்லாத கூட்டத்தில் ஒருவனாக இருக்கிறார் அசோக்செல்வன். ஜர்னலிசம் படிக்கும் இவருக்கு அனைத்திலும் முதல் மாணவி பிரியா ஆனந்த் மீது காதல்.

அவரிடம் காதலை இவர் சொல்ல, என்னை நீ காதலிக்க காரணம் இருக்கு. ஆனால் நான் உன்னை காதலிக்க என்ன காரணம் இருக்கு. நீ என்ன சாதித்துவிட்டாய்? என கேட்கிறார்.

இதன்பின்னர் அசோக் செல்வன் முன்னேறிவிடுகிறார் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்.

அதுதான் இல்லை. இவருக்கு தெரியாமலே இவர் முதல் மாணவனாக வந்து, பெரியளவில் பேசப்படுகிறார்.

இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? எப்படி சாத்தியமானது? அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டாரா அசோக் செல்வன்? பின்னர் என்ன ஆனது? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கேரக்டர்கள்…

அமைதியான நடிப்பு ஆனால் அசத்தியிருக்கிறார் அசோக் செல்வன். தன் கண்முன்னே தவறு நடந்தாலும் அதை கண்டுக் கொள்ளாத சராசரி மனிதனாக தன் வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவரது பாடி லாங்குவேஜ்ஜையும் மாற்றி ஜெயித்திருக்கிறார்.

பிரியா ஆனந்த், அழகான நடிப்பையும் கொடுத்திருக்கிறார். ஆனால் சில காட்சிகளில் முகமெல்லாம் வீங்கியது போல உள்ளது. ஸ்லிம் ஆனதால் நல்லது.

பாலசரவணன் தன் பந்தை சரியாக வீசி அடிக்கடி கவுண்டர் கொடுக்கிறார். பல இடங்களில் இவரது காமெடி கைத்தட்டலை அள்ளுகிறது.

தாதாவாக காட்டப்படும் இன்னும் மிரட்டியிருக்கலாம். ஆனால் அவரும் சாந்தமாக வந்து செல்கிறார்.

ஜான்விஜய், நாசர், அனுபமா, பக்ஸ் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நிவாஸ் கே பிரசன்னா இசையில் ஏன்டா இப்படி எனக்கு மட்டும் பாடல் ரசிக்க வைக்கிறது. அதன் பாடல்வரிகள் இரண்டு சூழ்நிலைக்கு ஏற்றமாதிரி மாற்றியிருப்பது சிறப்பு.
எஸ்பிபி வாய்ஸ் இன்னும் கூடுதல் பலம்.

பிகே. வர்மாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்து. க்ளைமாக்ஸ் இண்டர்வியூ காட்சிகள் நம்மை உருக வைக்கிறது.

இயக்கம் பற்றிய அலசல்….
படம் எதை நோக்கி செல்கிறது. இது எந்த மாதிரியான கதை என நாம் குழம்பும் நேரத்தில், சரியான ரூட்டில் அழைத்து சென்று நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார்.

ருசிக்கு சாப்பிடும் பல பேர். பசிக்கு சாப்பிடும் பல பேர். இந்த வேறுபாட்டை காண்பித்து, இனி உணவை வேஸ்ட் செய்யக்கூடாது என்ற எண்ணத்தை நம்மில் விதைக்கிறார்.

பெரும்பாலும் நாம் நட்சத்திரங்களை பிரபலங்களை மட்டும்தான் பார்க்கிறோம். கூட்டத்தில் ஒருத்தனாக இருப்பவனும் சாதனையாளன்தான். ஆனால் அவனை நாம் கவனிப்பதில்லை என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

கூட்டத்தில் ஒருத்தன்…. சாதனையாளன்.

நிபுணன் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அர்ஜீன், பிரசன்னா, வரலட்சுமி, சுகாசினி, சுமன், வைபவ், கிருஷ்ணா, போஸ்டர் நந்தகுமார், உமாரியாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : அருண்வைத்யநாதன்
இசை : நவீன்
ஒளிப்பதிவாளர் : அரவிந்த் கிருஷ்ணா
எடிட்டர்: சதீஷ் சூர்யா
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : அருண்வைத்யநாதன் (பேஷன் ஸ்டூடியோஸ்)

கதைக்களம்…

அர்ஜீன் ஒரு சிபிஐ ஆபிசர். இவரின் டீமில் இவருடனே இருக்கும் இருவர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி.

சிட்டியில் நடக்கும் ஒரு கொலையை துப்பறிய சொல்லி இவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.

அந்த கொலையாளி ஒரு கொலையை செய்துவிட்டு, அடுத்த கொலையை எப்போது செய்ய போகிறேன் என ஒரு அறிகுறியை வைத்தே செல்கிறான்.

இப்படி ஒவ்வொரு கொலையாக செய்து சிபிஐக்கே சவால் விடும் சீரியல் கில்லராக இருக்கிறார்.

எதற்காக கொல்கிறான்? யார் அவன்? கொலைக்கான காரணம் என்ன? என்பது புரியாமல் அர்ஜீன் டீமே குழம்புகிறது.

அதன்பின்னர் அவனை கண்டுபிடிக்க அர்ஜீன் போடும் திட்டம் என்ன? அவனை கண்டுபிடித்தாரா? யார் அவன்? என்ன காரணம்? உள்ளிட்டவைகளை க்ளைமாக்ஸில் சீட் நுனியில் உட்கார வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்வைத்யநாதன்.

கேரக்டர்கள்…

தமிழ் சினிமாவில் அர்ஜீனுக்கென்றே ரெடிமேடாக போலீஸ் டிரெஸ் இருக்கும். ஆனால் இதில் ஒரே உடையில் கலர் கலராக சிபிஐ கேரக்டரில் வருகிறார்.

வெறும் ஆக்சன் என்றில்லாமல் நிதானமாக விளையாடியிருக்கிறார். சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வந்தாலும் எனர்ஜிட்டிக்காய் இருக்கிறார்.

இவரது மனைவியாக வரும் சுருதிஹரி ஹரன் நல்ல தேர்வு. செக்ஸியான கண்களால் கவர்கிறார்.

இவர்களின் செல்லக்குழந்தையும் நம் மனதில் இடம் பிடிப்பாள்.

கொலை, துப்பறியும் சீன் என சீரியஸாக படம் சென்றாலும் பிரசன்னா கலகலப்பூட்டுகிறார். குற்றவாளியின் ஜட்டிக்குள்ள பாம் வைக்கனும் என அடிக்கடி சொல்கிறார்.

வரலட்சுமி கம்பீரமாக வந்தாலும் கவர்ச்சியாகவே தெரிகிறார். (நமக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறாரா?)

வைபவ் கேரக்டரில் இன்னும் வலு சேர்த்திருக்கலாம். ஆனால் இவர் சீரியல் கில்லராக இருப்பாரோ? என சந்தேகப்பட வாய்ப்புள்ளது.

சுமன், சுகாசினி ஆகியோர் பெற்றோரின் தவிப்பை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.


தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவும் எடிட்டர் சதீஷ் சூர்யாவும் படத்திற்கு இரு தூண்கள். தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

நவீன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பேசப்படும்.

இயக்கம் பற்றிய அலசல்…

சீரியல் கில்லர் யார்? என க்ளைமாக்ஸ் வரை ட்விஸ்ட் வைத்து, அதில் முக்கியமான ஹீரோவை காட்டியிருப்பபது அருண்வைத்யநாதனின் அருமையான முயற்சி.

ஆனால் அந்த சுவாரஸ்யத்தை கொஞ்சம் கூட்டி, கொன்றதற்கான காரணத்தை வலுவாக சொல்லியிருக்கலாம்.

வயசு பெண் இருக்கும் வீட்டில் மற்ற ஆண்களை விடுவதால் என்ன பிரச்சினை என்பதையும், மகளுக்காக பணத்தை செலவழிக்கும் நாம் நேரத்தையும் செலவழிக்கனும் என சொல்லியிருப்பது சபாஷ் போட வைக்கிறது.

குற்றவாளியை கண்டுபிடித்தபின் இது போன்று கதையை வைத்து தேச விரோதிகளை கொன்றால் என்ன? என அர்ஜீன் கேட்பது போலீஸ் தந்திரம்.

நிபுணன்… நிம்மதி

More Articles
Follows